|
சென்னை, ஜனவரி 27: முன்னாள் துணை முதல்வரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில், சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "டி.ஜி.பி. அலுவலகத்தில் தான் ஒரு புகார் கொடுத்ததாகவும், அதில் சிறுதாவூர் கொடநாடு மாளிகைகள் பினாமி பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்வர் சென்று ஓய்வெடுத்து வருகிறார். ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறியுள்ளதாக ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முதல்வர் மீது ஸ்டாலின் அவதூறு செய்திகளை பரப்பியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
|